மார்க்சியக் கோட்பாட்டாளர்களான கோவை ஞானி, அ.சிவானந்தன், கா.சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சினைகளான தேசியம், பின்-மார்க்சியம், சாதியம், பின் நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள். உளவியலாளரான ராம் மகாலிங்கம் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் மற்றும் சாதீய நீக்கம் குறித்தும் உரையாடுகிறார். ஈழப் பதிப்புலக முன்னோடியான இ.பத்மநாபர் ஐயர் ஈழ பதிப்புத்துறை குறித்தும், ஈழக்கவிஞர் மு.புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும், ஓவியர் புகழேந்தி தனது படைப்பின் சமூக ஆதாரங்கள் குறித்தும், தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியரான தியோடர் பாஸ்கரன் திரைப்பட அழகியல் மற்றும் வரலாறெழுதியல் குறித்தும், நாவலாசிரியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள்.
படிக்கத் தெரிந்த தொழிலாளியான ஜி.கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில், என்றும் கலையாத அவரது கம்யூனிசக் கனவு குறித்து உரையாடுகின்றார். கடந்த இருபது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட பதின்மூன்று உரையாடல்களின் தொகுப்பு இந்நூல்.